படையப்பா என்றொரு திரைப்படத்தில் அதிகமா ஆசைப்படுற ஆம்புளையும் அதிகமா கோபப்படுற பொம்புளையும்....அதென்னப்பா ஆண்கள் ஆசைப்பட கூடாதாம் ஆனால் கோபப்படலாமாம்...பெண்கள் ஆசைப்படலாமாம் ஆனால் கோபப்படக்கூடாதாம். எங்கேருந்தையா இந்த சைக்காலஜி எல்லாம் கத்துகிட்டு வர்றீங்க....மறுபடியும் பெண் என்பவள் போர்த்திக்கொண்டு கோபப்படாமல் தலை குனிந்தபடி ஆண்களை கண்டால் நாணி ஒடுங்கி ஒடிந்து ஓடக்கூடிய அந்த திரைப்படத்தில் வரும் சவுந்தர்யா போல் இருக்கவேண்டும் என்று சூப்பர் ஸ்டார் வருங்கால இளைஞர்களுக்கு ஆணாதிக்கம் கற்றுக்கொடுக்கிறார்.
படையப்பா திரைப்படம் எனக்கு பிடிக்கும். ஒரு ஆணின் உயிர் பிச்சையில் வாழ பிடிக்காத ஒரு புரட்சி பெண்ணாக ரம்யா நடித்திருப்பார். உண்மையில் அந்த கிளைமாக்ஸ் ரஜினிக்கு எத்தனை பெரிய அவமானம். ஆனால் நாம் பிச்சை போடுவது சூப்பர் ஸ்டார் என்பதால் அவரது பிச்சையை தூக்கி அவர் முகத்தில் வீசிய வீர பெண்மணியை பரிதாபத்தோடும் பிச்சை போட்ட சூப்பர் ஸ்டாரை கம்பீரத்தோடும் பார்க்க பழகிவிட்டோம். காலம்காலமாய் பெண்கள் அடிமைகளாய் வீட்டு வேலை செய்தபடி வீட்டோடு இருக்க வேண்டும் என்று நமது ஹீரோக்கள்கள் கற்பித்து வைத்திருக்கிறார்கள்.

எல்லோரும் நல்லா பாத்துக்கோங்கப்பா......ஹீரோ மற்றும் ஹீரோவின் அறிவுரைப்படி உடை உடுத்தியிருக்கும் மகாலட்சுமி. உடம்ப காட்டக்கூடாதுன்னு ஆணாதிக்க அறுவுரை சொன்ன நமது தளபதி கட்டிக்கொண்டு நிற்பது நம்புங்கப்பா மகாலட்சுமி...
திரைப்படங்களில் ஒரு காட்சியில் ஹீரோயின் ஆடை ஆபாசமாக இருப்பதாய் ஹீரோ அறிவுரை கூறுவார். அதாவது பெண்கள் அடக்கமாக அமைதியாக பஜாரியாக அல்லாமல் நாணத்தோடு வெட்கப்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று ஹீரோ அறிவுரை கூறுவது அதற்கு அடுத்த காட்சியில் ஹீரோவின் அந்த ஆணாதிக்க அறிவுரையால் மனம் மாறி ஹீரோயின் புடவை சுற்றிக்கொண்டு வந்து தன் காதலை வெளிப்படுத்துவதும் அதற்குள் பொறுமையில்லாமல் அடுத்த காட்சியில் சுவிட்சர்லாண்டில் ஹீரோயினுக்கு ஒரு ஜெட்டியும் பிராவும் கொடுத்து அரை நிர்வாணமாய் ரோட்டில் ஆட விட்டு ஹீரோ கோட் சூட் கூளிங் கிளாஸ் சமிதமாய் ஓடி வருவதும்.....அட டா என்னே தமிழ் சினிமா....
தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆணாதிக்க சிந்தனைகளை போதிக்கவும் அதே படத்தில் ஐட்டம் சாங் என்ற பெயரில் அரை நிர்வாணமாக பெண்களை குலுங்க விட்டு வேடிக்கை பார்ப்பதற்கும் மட்டுமே ஹீரோயின்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறார்கள். மொழி போன்ற பெண்ணை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் ஒரு விலக்கு. மற்றபடி ஹீரோ ஏழைகளுக்கு தையல் மெஷின் கொடுப்பதும் ஞாயத்தை நிலை நாட்டுவதும் குடிசை மக்களோடு குழந்தைகளோடு பாடுவதும் ஆலமரம் ஆக்ஸ்போர்டு ஆக வேண்டும் என்ற கற்பனைக்கும் எட்டாத கர்மாந்திர வரிகளை பாடி இளைஞர்களை தன் பால் ஈர்த்து அரசியல் சினிமா ஆதாயம் தேடவும் மட்டுமே பயன்படுகிறார்கள்.
இங்கே உலக சினிமா உலக சினிமா என்று பீற்றிக்கொள்ளும் கமல் கூட ஒரு பெண் கதாபாத்திரத்தை ஆபாசத்தின் உச்சமாகவும் இன்னொரு கதாபாத்திரத்தை வெகுளித்தனத்தின் உச்சமாகவும் காட்ட தவறவில்லை. ஆனால் அதே திரைப்படத்தில் அவர் மட்டும் பத்து வேடங்களிலும் புரட்சியாளராகவே வருகிறார்.
நேற்று போக்குவரத்து கழகத்தின் பேருந்தின் கூரையின் மீது நின்றுகொண்டு கல்லூரி மாணவர்கள் டான்ஸ் ஆடுகிறார்கள். ஒருவர் தவறி விழுகிறார். உடனே அந்த மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் ரயில் ஆட்டோ என்று கற்களை வீசி தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட குரங்கு கூட்டம் தான் விஜய் ரஜினி என்று கையில் ஒரு கர்சீப்பை கட்டிக்கொண்டு போஸ்டர் ஒட்டி அடித்து பிடித்து டிக்கெட் வாங்கி முன் இருக்கையில் அமர்ந்து விசில் அடிக்கிறது. அந்த ஒன்றுக்கும் உதவாத ஆண் வீரர்கள் தங்களின் ஹீரோ ஆணாதிக்க வசனம் பேசும் போது விசில் அடிப்பார். அது போன்ற மன நிலை பாதிக்கப்பட்ட இளைஞர்களை ஒரு வித வன்முறை ஆபாச போதையில் ஆழ்த்தி பணம் பார்க்கும் நீங்கள் எல்லாம் ஹீரோக்கள்(குரங்கு கூட்டத்திற்கு மட்டும்) என்று சொன்னால் நான் ஒத்துக்கொள்வேன் தயவு செய்து சினிமா கலைஞர்கள் என்று சொல்லி சினிமா என்ற அதிசயத்தை அழுக்கு படுத்த வேண்டாம்.
என்னுடைய பெண் பார்க்கும் படலம் என்ற கட்டுரைக்கு நிறைய பதில்கள் வந்தன. சில பதில்களில் பெண் பார்க்க வரும் பொழுது காபி கொடுப்பதில் தவறில்லை என்று சொன்னார்கள். காபி கொடுப்பதில் தவறில்லை. அதை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யட்டுமே. பெண் தான் காபி தட்டை தூக்கிக்கொண்டு போய் ஒரு சர்வரை போல் ஒவ்வொருவருக்கும் காபி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லையே.
பெண் பார்க்கும் சடங்கில் இப்போது காலில் விழுவது இல்லை பாட்டு இல்லை என்றெல்லாம் பெரிய புரட்சியாளர்கள் போல் ஆண்கள் எழுதுகிறார்கள். ஆண்களே உங்கள் முன்னோர்கள் இதை எல்லாம் கன கச்சிதமாய் பின் பற்றினார்கள். பெண்களை பாட சொல்லி அவள் ஊமையா இல்லையா என்று சரி பார்த்தார்கள். நடக்க சொல்லி நொண்டியா இல்லையா என்று சோதித்தார்கள். பெரியர்வர்களை சேவித்தல் என்று சொல்லி மண்டி போட்டு தலை குனிய வைத்தார்கள். இப்போது பெண்கள் வளர்ச்சியும் எழுச்சியும் அடைந்த பிறகு அப்படி சொல்ல உங்களுக்கே கூச்சமாக இருக்கும் அல்லது அப்படி சொன்னால் எந்த பெண்ணும் செய்ய மாட்டாள் என்பதால் தான் அந்த சங்கதிகள் எல்லாம் மூட்டை கட்டப்பட்டன. மாறாக ஆணாதிக்க சிந்தனை இல்லாததாலோ....அல்லது ஆண்கள் எல்லாம் புரட்சியாளர்கள் ஆகிவிட்டதாலோ அல்ல...பெண்கள் முன்னேறியதால் தான் இந்த கொடுமைகள் அழிக்கப்பட்டு விட்டன.






