பத்தினியை ஒழிப்போம்.
உலக தமிழ்மாநாடு நடக்கும் இத்தருணத்தில் நான் அதிகாரத்தில் இருந்தால் முதலில் தமிழ் அகராதியில் சில வார்த்தைகளை நீக்கவேண்டும் என பரிந்துரைப்பேன்.
முதல் வார்த்தை
பத்தினி.சமீபத்தில் ஒரு அனானி (சஞ்சை அல்ல வேறொருவர். அவருடைய பின்னூட்டத்தில் மேலும் தகாத வார்த்தைகள் இருந்ததால் அனுமதிக்கவில்லை.) என் பதிவில் வந்து நீ ஒரு சைக்கோ....பத்தினி வேஷம் போடுகிறாய் என்று முழங்கினார்.
எனக்கு அதை படித்துவிட்டு செம சிரிப்பு.
பத்தினி வேஷம் நான் போடுகிறேனா? முதலில் பத்தினி என்றால் என்ன? பத்தினி என்பவள் ஒரு அணு விஞ்ஞானியா அல்லது பல தத்துவங்களை எழுதிய ஒரு சிறந்த எழுத்தாளரா...அல்லது மின்சாரம் டெலிபோன் இப்படிப்பட்ட அறிவியல் சாதனைகளை நிகழ்த்திய பெண்மணியா...இல்லை சமுதாய முன்னேற்றத்துக்கு உழைத்த சமூக சேவகியா.
அது எல்லாம் இல்லை. பத்தினி என்பவள்அகராதிப்படி கணவன் எத்தனை பேருடன் படுத்தாலும் தன்னை எத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்கினாலும் நெறி தவறாமல் தன் கணவனுக்கு மட்டுமே முந்தி விரிக்கும் ஒரு பேதை பெண். பச்சையாக சொல்லவேண்டுமானால் கணவனுக்கு அரிப்பெடுத்தால் அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் அவன் விரும்பும் பெண் வீட்டில் விட்டுவிட்டு வெளியே காவல் இருக்கவேண்டும். காரியம் முடிந்த பிறகு மீண்டும் கூடையில் சுமந்து வீட்டில் கொண்டு போய் விடவேண்டும். அவனை கூடையில் சுமந்துகொண்டு போய் நடுக்கடலில் போட்டால் தான் என்ன?
இப்படி கணவனுக்கு முந்தி விரித்து கிடைக்கையில் அவன் தன் உடல் தேவையை பூர்த்தி செய்துவிட்டு எழுந்து போவான். இவள் உடனே தாலியை முத்தம் செய்து கண்ணில் ஒற்றிக்கொள்ளவேண்டும். இது தானே பத்தினி என்ற ஆணாதிக்க சொல்லின் விளக்கம். அப்படியானால் அந்த வேஷம் போட நான் தயாராய் இல்லை. அப்படி ஒரு அடிமை வேஷம் போட நான் தயாராய் இல்லை தோழரே.
சில பெண்கள் இன்னும் பத்தினியாய் இருக்க பிரியப்படுகிறார்கள். அவர்கள் இருந்து தொலையட்டும். கணவன் நலம் வாழ மண் சோறு தின்று வாழட்டும். அந்த மூட நம்பிக்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு வேளை என் கணவனுக்கு உடல் நிலை சரியில்லை என்றால் நான் மருத்துவமனைக்கு கூட்டிக்கொண்டு போவேனே தவிர மண் சோறு தின்ன மாட்டேன். உடனே தாலியை எடுத்து கண்களில் ஒற்றிக்கொண்டு குஷ்புவை போல் அங்க பிரதட்சணம் செய்யமாட்டேன். அவன் அருகில் இருந்து அவனை அக்கரையோடு பார்த்துக்கொள்வேன்.
அந்த நபருடைய பின்னூட்டத்தை படித்த பிறகு என்னை திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரிடம் முதலில் நான் சொல்ல நினைப்பது "நான் ஒரு பத்தினி இல்லை” என்பதை தான்.
அடுத்தது வாழாவெட்டி.ஆண்களே சிந்தித்து பாருங்கள் . இப்படி ஒரு சொல் வழக்கில் இருக்கும் ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாய் எப்பேர்ப்பட்ட ஒரு ஆணாதிக்க போக்கு நடைமுறையில் இருந்திருக்கும் என்று சிந்தித்து பாருங்கள்.
பெண்ணுடைய அப்பா வரதட்சணை கொடுத்து ஒருவனுக்கு தன் மகளை திருமணம் செய்து வைக்கிறார். அதாவது காசு கொடுத்து ஒரு கழுதையை பொதி சுமக்க நாம் விலைக்கு வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். (வரதட்சணை வாங்கி திருமணம் செய்பவர்களை எல்லாம் நான் கழுதைகள் என்று சொல்லவில்லை....வரதட்சணை கேட்டு திருமணம் செய்பவர்களைத்தான் சொல்கிறேன் என்று புரிந்துகொள்பவர்கள் புரிந்துகொள்ளட்டும்) அந்த கழுதை பாதி தூரம் போன பிறகு சோம்பேறித்தனம் பட்டோ அல்லது கொழுப்பு எடுத்தோ அங்கேயே படுத்துவிடுகிறது.

ஆனால் நமக்கோ கடமை இருக்கிறது. பொதியை குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் கொடுத்தாக வேண்டும். என்ன செய்கிறோம் கஷ்டப்பட்டு அந்த பொதியை நாமே தூக்கிக்கொண்டு போகிறோம். அப்படி சுமக்கும் நமக்கு பெயர் தான் வாழாவெட்டி. புருஷன் திருமண பந்தத்தின் கடமையை மறந்த ஏதாவது ஒரு காரணத்திற்கு மனைவியை வீட்டை விட்டு துரத்திவிடுவான். அப்படி துரத்தப்பட்ட பெண்ணுக்கு பெயர் வாழாவெட்டி. அல்லது புருஷன் வேறொரு பெண்ணுடன் கிளிக்காகி ஓடிவிடுவான் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வரும் அவமான சொல் வாழாவெட்டி. ஓடிப்போன கணவனுக்கு இன்னொரு ரேஷன் கார்டில் "குடும்ப தலைவர்" என்ற அருமையான பெயர் கிடைத்துவிடும்.
உண்மையில் நம் கலாசாரத்தை வடிவமைத்தவர்களுக்கு நிச்சயம் நல்ல கற்பனை திறன் இருந்திருக்கவேண்டும். பாருங்கள் எத்தனை இரவுகள் ரூம் போட்டு யோசிச்சு பெண்களை எப்படி எல்லாம் கேவலப்படுத்தலாம் கொடுமைபடுத்தலாம் தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்துக்கொள்ளலாம் என்று வடிவமைத்திருக்கிறார்கள். மேலும் வாழாவெட்டி என்பவளை கேவலமாக நடத்தினால் எந்த பெண்ணும் தான் வாழாவெட்டி ஆகிவிடாமல் இருக்க கணவனுக்கு பணிந்து இருப்பாள் என்ற சாடிஸ் மனநிலையோடு உருவாக்கப்பட்ட சொல் தான் வாழாவெட்டி.
இப்படிப்பட்ட சொற்களை தமிழ் அகராதியிலிருந்து நீக்கும் முன்பாக மனித மனங்களிலிருந்தும் நீக்கவேண்டும். பெண் எப்படியெல்லாம் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்தால் இது போன்றதொரு சொற் பிரயோகம் நம் வழக்கில் இருக்கும் என்பதை சிந்தித்து பாருங்கள்.
நான் ஆண்களை கேவலமாக பேசுவதாக சில ஆண்கள் கண்டமேனிக்கு என்னை திட்டி தாளிக்கிறார்கள். நான் பிரசுரிக்கும் கமென்டுகள் ஒரு சாம்பிள் தான். வருபவையோ ஏராளம். அப்படிப்பட்ட ஆண்களுக்கு பொதுவான ஒரு குணம் என்னவென்றால் அவர்களுக்கே தெரிகிறது தாங்கள் இருக்கும் தளம் போலியானது...வெட்டி ஈகோவால் உருவானதென்று. அதனால் அந்த தளத்தை நான் தகர்கிற பொழுது அவர்கள் விழுந்துவிடுவார்களோ என்ற அச்சத்தினால் தான் என்னை தூஷிக்கிறார்கள். அதனால் நான் அசரப்போவதில்லை.
ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் ஒயின் ஷாப்பில் வேட்டி கிழிய குடித்துவிட்டு அந்த குப் நாற்றத்தோடு கெட்ட வார்த்தை பேசுவதையும்....சாலையில் எல்லோரையும் முந்திக்கொண்டு போக நினைக்கும் அவசர (செக்ஸில் காட்டும் அவசரத்தை ஆண்களே ஏன் சாலையில் காட்டுகிறீர்கள்) நிலையும் அப்படி போகிற போது யாராவது அப்பாவி குறுக்கே வந்து மாட்டிக்கொண்டால் உடனே காளரை தூக்கிவிட்டுக்கொண்டு மச்சி மாமு என சகலரையும் துணைக்கு அழைத்து வன்முறையை தூண்டும் உங்களின் அராஜக போக்கு தான் வீரம் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அந்த வீரமும் கெட்ட வார்த்தைகளும் வன்முறையும் பெண்களிடம் செல்லுபடியாகாதென்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் அகராதியில் நிறைய பெண்ணடிமை வார்த்தைகள் இருக்கின்றன. மேலும் நிறைய வார்த்தைகள் புழக்கத்தில் உள்ளன.
மேலும் இந்த அவல நிலைக்கெல்லாம் தீர்வு என்னவென்று கேட்டால் உடனே மேலோட்டமாக பெண் கல்வி பெண் இட ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுவோம். அது எல்லாம் தவறு. அதற்கெல்லாம் மேலே பெண்கள் முதலில் தங்களை மதிக்க தெரிந்துகொள்ளவேண்டும். நான் ஒரு பெண் தானே என்று சோர்ந்து போகாமல் நான் ஒரு பெண் என்று தன்னம்பிக்கையோடு எழுந்து நிற்கவேண்டும். அந்த எழுச்சியில் தான் ஆணாதிக்கத்தை நாம் சுருட்ட முடியும். இன்னும் ஆண்களை சார்ந்து வாழ்வதையே நம் தலையாய கடைமையாக நினைத்துக்கொண்டிருந்தால் முன்னேர்ரம் கடினம் தான்.
வேறொரு நபர்...பெண்களுக்கு அழகே சக்தி என்று சொல்லி அவர்களை நான் போகப்பொருளாக பார்க்கிறேன் என்று பொங்கியிருந்தார்.
அந்த தோழருக்கு நான் சொல்லிக்கொள்வது மறுபடியும் மறுபடியும் பெண்களுக்கு அழகே சக்தி.
ரோஜா மலர் அழகாய் இருப்பது அதன் சக்தி. அதை செடியில் வைத்து அழகுபார்க்காமல் உங்கள் தேவைக்கு அதை பறித்து கயிற்றில் கட்டி தொங்கவிடுகிறீர்களே அந்த ஆணாதிக்கம் தான் பெண்ணை போக பொருளாய் பார்க்கிறது. பெண்ணை பெண்ணாக பாவியுங்கள். பெண் அழகாய் இருப்பதால் அவள் போதை பொருளாகிப்போவது உங்களுக்குத்தான். நீங்கள் அவளை மதிக்க கற்றுக்கொள்ளுங்கள் அப்போது நீங்களே சொல்வீர்கள் பெண்ணுக்கு அழகே சக்தி.
பெண்ணுக்கு அழகே சக்தி.நாங்கள் போதை பொருளாய் இருப்பதில் கூட வருத்தப்படவில்லை. ஆனால் எங்கள் அனுமதி இல்லாமல் எங்களை ஏமாற்றி அந்த போதையை நீங்கள் நுகர்ந்து பார்த்து அனுபவித்து பின்பு எங்களை அடிமைகளை போல் நடத்துவதை தான் நான் பெரிதும் எதிர்க்கிறேன்.
இன்னொரு நபர்...என் பதிவுகளை பெண்கள் புறக்கணிக்கிறார்களாம். அதில் அவருக்கு ஒரு சந்தோஷம் வேறு இருக்கிறது போல. ஏனென்றால் பெண்கள் எல்லாம் என் பதிவுகளை படித்து ஆண்களின் ஈகோவையும் ஆதிக்க அராஜகங்களையும் எதிர்க்க தொடங்கினால் ஆண்களுக்கு டவுசர் கிழிந்துவிடுமோ என்ற பயம். மேலும் பெண்கள் இதை புறக்கணித்தாலோ ஆண்கள் இதை புறக்கணித்தாலோ எனக்கு கவலை இல்லை. நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தான் இருப்பேன். ஆதரிப்பவர்கள் ஆதரிக்கட்டும்.
மேலும் எனக்கு ஓட்டு போடும் பின்னூட்டமிடும் அத்தனை தோழர் தோழிகளுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
பிறகு ஒருவர் நான் மற்ற பதிவர்களின் பதிவுகளில் பின்னூட்டமிடுவதன் மூலம் பிரபலமாக நினைக்கும்ம் ஒரு வேசி என குறிப்பிட்டிருந்தார். பலே பலே....என் பதிவில் வரும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவே எனக்கு நேரம் போதவில்லை. பிறகு எப்படி இந்த குற்றச்சாட்டு.
இப்படி எனக்கு வரும் பின்னூட்டங்களில் வரும் தவறான புரிதல்களுக்கு பதில் எழுதுவதிலேயே என் காலம் போய்விடுகிறது. இருந்த போதும் எனக்கு அது மகிழ்ச்சியே. தொடர்ந்து உங்கள் வாதங்களை நாகரீகமான முறையில் முன் வையுங்கள். விவாதிப்போம்.
மேலும் உங்கள் சந்தேகங்களையும் ரகசிய கேள்விகளையும் என் மின் அஞ்சலுக்கு செலுத்துங்கள்.....
vincyontop@gmail.com